காலத்துக்கு பதில் கூறும் சித்த மருத்துவ நூல்கள் ஆராய்ச்சி -1
அனைவருக்கும் கண்டாரை நோக்கிக் கருத்தோடு நில்லாதவனின் சித்தர்கள் தின நல்வாழ்த்துக்கள் .
இன்று சித்தர் தினம் பல்வேறு சித்த மருத்துவர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதில் எனக்கு உண்டான கேள்வி
1.சித்தர்கள் இதனை என்ன கண்ணோட்டத்தில் காண்பார்கள்?.
2.சித்தர் தின கொண்டாட்டத்தை விரும்புகிறார்களா இல்லையா? என்பதுதான் எனது கேள்வி.
முதலில் சித்தர்கள் இக்காலகட்டத்தில் இருக்கிறார்களா? என்பதை அறிவது முக்கியம் . அவர்கள் இன்றும் இருக்கிறார்கள் என்று காரைச் சித்தர் பாடலில் கூறியுள்ளார்.
"பூரணர்கள் மறைந்துள்ளார் அவரை காணே"
அதாவது சித்தர்கள் போன்ற மனிதர்கள் தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாக மக்களோடு இருப்பார்கள். அவர்களை நம் உண்மையான தேடலின் மூலமாக அறிந்து கொள்ள வேண்டும்.
மேலும் காரைச் சித்தர்,
"தூய நெறி காட்டி நின்றார் சித்தர் சித்தர்"
என்று கூறுகிறார்.
அதனால் அவர்கள் பல நல்வழியை மக்களுக்கு போதிப்பதற்காக இக்காலத்தில் இருக்கிறார்கள் என்பது திண்ணம்.
சித்தர்கள் போன்றவர்களை எக்காலத்திலும் இயற்கை உருவாக்கிக் கொண்டுதான் உள்ளது.
இனி நமக்கான கேள்விக்கு வருவோம். நம் கேள்விக்கு விடை அளிப்பது குதம்பை சித்தர்,
"கண்டாரை நோக்கி கருத்தோடு இருப்போர்க்கு
கொண்டாட்டம் ஏதுக்கடி குதம்பாய்
கொண்டாட்டம் ஏதுக்கடி?"
என்று கூறுகிறார்.
இப்பாடலின் பொருள், கண்டார்கள் என்பது இறைவனைக் கண்டவர்கள் என்று பொருள் கருத்தோடு இருத்தல் என்பது பின்பற்றி இருத்தல். இறைவனை கண்ட சித்தர்கள் போன்ற பெரியவர்களின் போதனைகளை அவர்கள் கூறிய வழிமுறைகளை கருத்தோடு யார் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு கொண்டாட்டம் என்பது தேவை இல்லை என்பது இப்பாடலின் பொருள்.
இதன் மூலம் நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் சித்தர்கள் வழிமுறைகளை கடைபிடித்து அவர்கள் கூறிய நித்திய கன்ம ஒழுக்கங்களை சரிவர கடைபிடித்து வருபவர்களுக்கு அதுவே ஒரு கொண்டாட்டமாய் அமைவதால் அவர்களுக்கென்று ஓர் கொண்டாட்டம் தேவை இல்லை என்பது புலனாகிறது.
உருவ வழிபாடு எதிர்த்த சித்தர்களுக்கு சிலை வைத்து சித்தர் தினம் கொண்டாடப்படுகிறது😑.இதன் மூலம் "உருவ வழிபாடு எதிர்த்தல்" என்னும் கண்டார் கருத்தை நோக்கி கருத்தோடு இல்லாததால், என் போன்றோர் கொண்டாட்டத்தில் (சித்த மருத்துவ தின கொண்டாட்டம்) கருத்தைச் செலுத்தினர் என்பது புலனாகிறது. இது போல் பல உதாரணம், தினமும் செய்து பழக வேண்டிய யோக பயிற்சி (கண்டார் கருத்து) இன்று அனைவரும் காண ஒருநாள் கொண்டாட்டமாய் அதன் புகைப்படம் முகநூல், ஊடகத்தில் வலம்வரும். மொத்தத்தில் ஏட்டில் எழுதி வைத்தது நம்நாட்டில் நிலைக்கவில்லை.
நிற்க,எதுஎதுவாகினும், காலத்திற்கு ஏற்றாற்போல் எழும் கேள்விகளுக்கு சித்தர் நூலில் பதில் உண்டு என்பது திண்ணம்.
நன்றி
Comments
Post a Comment